வியாழன், 20 செப்டம்பர், 2012

மதுக்குடித்தால் ஈரலைப் பாதிக்கும்.எப்படி? படியுங்கள்.


    நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாகும். அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சிறப்பாக செயல்பட்டு தன் வேலையை செம்மையாக செய்துகொண்டிருக்கிறது.

    அதில் ஈரலின் பணியைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். தெரிந்து கொண்டால் நிச்சயம் திருந்திகொள்ள முடியும் அல்லவா? சரி இப்பொழுது தெரிந்துக்கொள்ள படியுங்கள். உடலுக்கு நோய் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட அதற்குரிய மருந்தை உட்கொள்கிறோம். நாம் உடலுக்காக உட்கொள்ளும் எல்லா மருந்துகளும் ஈரலில் நின்றுதான் செயல்படுகின்றன. இத்தகைய அரும்பணியாற்றும் ஈரலைத்தான் குறிவைத்து முடக்குகிறது நீங்கள் குடிக்கும் மது. அதனால் எந்த மருந்தும் வேலை செய்யாதபடி செயல்திறனை இழந்து விடுகிறது நம் ஈரல்.

    நோய்க்கு தீர்வு நோய்க்குரிய மருந்துதானே! மருந்தைத் தாங்கிக்கொண்டு செயல்படவேண்டிய ஈரலே தன் செயல்திறனை இழந்தால் நீங்கள் உட்கொள்ளும் மருந்து வேலை செய்யுமா? நிச்சயம் வேலை செய்யாது. உட்கொண்ட மருந்து வேலை செய்யவில்லையென்றால் நோய் எப்படி தீரும்? தீராது. பிறகு நோய் முற்றிவிடும். பிறகு நடப்பது என்ன என்பது உங்களுக்குத் தெரியும் தானே? இப்படி உயிரைக் குடிக்கும் மதுப்பழக்கம் தேவையா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இனி அந்தப்பழக்கம் வேண்டாமென்று ஒதுக்கி வாழுங்கள். அது உங்களுக்கும் நல்லது. உங்களையே நம்பியிருக்கும் குடும்பத்தாருக்கும் மிக நன்மைதானே? சரி இனி மதுக்குடிக்காமல் வாழ்வீர்கள் அல்லவா? மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

புதன், 19 செப்டம்பர், 2012

மதுப்பழக்கத்தால் மலட்டுத்தன்மைக்கு தள்ளப்படும் ஆண்கள்!

பல்வேறு போதை பொருள்களுக்கு அடிமையானவர்களா?
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில எச்சரிக்கை தகவல்கள்!

இதோ! உங்களுக்காக!!

1. நீங்கள் குடிக்கும் மதுவால் சிற்றின்பம் கிடைக்கலாம். ஆனால், ஒரு ஆண் மகனாக நடந்துக்கொள்ள முடியாது என்றால் அந்த மது தேவையா? சிந்தித்துப் பாருங்கள்.

2. அதிக மதுவால் கல்லீரலின் இயக்கத்தையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைத்து, பெண்களின் ஹார்மோன் என அழைக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அளவை இரத்தத்தில் அதிகப்படுத்துகிறது. அதன் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை அளவையும் குறைத்து ஆண்மைத்தன்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். இந்த நிலைத்தேவையா? சிந்தித்துப்பாருங்கள்.

3. அளவுக்கதிகமான போதை மருத்துக்களை பயன்படுத்துவதால் விந்தணுக்கள் முறையாக வளர முடியாது.  சரியான வளர்ச்சி இல்லாத விந்தணுவால், எந்த பயனும் இல்லை.  இது தவிர, விரைகளின் இயக்கத்தையும், ஹார்மோன்களின் கட்டுப்பாட்டையும் சிதைத்து விடுகிறது.  அதன் காரணமாக ஆண்குறியின் விரைக்கும் தன்மை குறைந்து ஆண்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

    விந்தணுக்களின் உற்பத்திக் குறைவு காரணமாக ஆண்மை இழப்பு ஏற்படுகிறது.  தொடர்ந்து குடி பழக்கம், போதை மருந்துகளின் ஈடுபடுவதால் குழந்தைபேறு என்பது வெறும் கானல் நீராகி விடும். குழந்தைபேறு இல்லாத ஒரு வாழ்க்கை என்பது நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே இனிவரும் காலங்களில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறி வாழுங்கள். அது உங்கள் வாழ்க்கையை நிச்சயம் அர்த்தமாக்கும்.
  
    உங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொள்ள இன்றே முடிவெடுங்கள். இனி மது, போதைப்பழக்கத்தில் ஈடுபடமாட்டேன் என்ற நல்ல முடிவுகளால் நிச்சயம் நன்மை கிடைக்கும். உடனே செயல்படுத்துங்கள். செயல்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

மதுப்பழக்கத்தால் சிறுமூளை எப்படியெல்லாம் பாதிப்படைகிறது


மதுப்பழக்கத்தால் சிறுமூளை பலநிலைகளில் பாதிப்படைகிறது.

1. இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் (அசினர்ஜியா).
2. தூரத்தை கணிக்க முடியாமை (டிசிமெட்ரியா).
3. நடுக்கம்.
4. தள்ளாட்ட நடை (அடாக்சிக் கெய்ட்).
5. சமநிலையை இழந்து அல்லது கீழே விழும் நிலை).
6. பலவீனமாகும் தசைகள் (ஹிப்போட்டோனியா).
7. குழறலான பேச்சு (அடாக்சிக் டிசரித்யா).
8. ஒழுங்கற்ற விழிக்கோள அசைவு (நிஸ்டாக்மஸ்).
9. வேகமாகச் செயல்களை மாற்றி மாற்றி செய்யமுடியாமை.
எப்படியெல்லாம் சிறுமூளை பாதிக்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்துக்கொண்டீர்கள் அல்லவா?

இனியும் தேவையா மதுப்பழக்கம். வேண்டவே வேண்டாம் விட்டு விடுங்கள் அதனால் மூளைதிறனை தாக்கும் நோயிலிருந்து தப்பித்து வாழலாம் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மது குடிக்க மாடீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

60 வகையான நோய்களுக்கு மதுபானம்தான் காரணம் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


    உயிர்க்கொல்லி நோய் எய்ட்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. அதைவிட மிகப்பெரிய நோயாக குடிநோய் உள்ளது. அது அனைத்து வகையான மனிதர்களையும் பல்வகை நோய்களுக்கு அழைத்துச்சென்று விடுகிறது. அதில் புற்றுநோய், இருதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு இன்னும் பலவகையான நோய்களுக்கும் இப்பழக்கமே பிரதான காரணமாக இருக்கிறது. இப்பழக்கத்தால் ஆண்டுக்கு 3.20 லட்சம் பேர் இறக்கின்றனர். இப்படியாக உயிரை பறிக்கும் மதுபானப் பழக்கம் தேவையா? இனியும் அதைப்பற்றி நினைத்துப்பார்க்காதீர்கள். முழுமையாக விட்டு விட்டு மாற்று செயல்களில் உங்கள் சிந்தனையை கொண்டுசெல்லுங்கள். மாற்றிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

ஆணின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்கள்

    மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் அவற்றில் இரண்டு முக்கிய காரணங்கள் நம்மால்தான் ஏற்படுகிறது.

1. போதைப் பொருள் பயன்படுத்துவது.
2. நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்.

போதைப் பொருட்களால் ஏற்படும் மலட்டுத் தன்மைகள்:-

     போதைப் பொருளுக்கு பலமோசமான குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் குணமும் ஒன்று.  அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கும் ஓர் குடிகாரனாலோ அல்லது போதை மருந்தை உபயோகித்து மிகுந்த போதையில் இருக்கும் ஒருவனாலோ, ஓர் ஆண்மகனாக நடந்துக் கொள்ள முடியாது. தொடர்ந்து போதை மருந்துக்களை உபயோகித்தால் குழந்தைபாக்கியம் என்பது கேள்விக்குறியாகிவிடும்..  
    போதைப்பொருளை ஏற்றுக்கொண்டால் நல்ல சிற்றின்பத்தில் ஈடுபடலாம் என்பார்கள் ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மீறி நடந்தீர்களானால் ஆண்மகனாக நடந்துக் கொள்வதற்குரிய உறுதியை இழந்துவிடுவீர்கள். இது தவிர கல்லீரலின் கட்டுப்பாட்டையும் குலைத்து, பெண்களின் ஹார்மோன் என அழைக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அளவையும் இரத்தத்தில் அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடுகின்றது.
  போதை மருந்துகளோ ஏகப்பட்ட பின் விளைவுகளை உண்டாக்கி, விந்தணுக்களை முறையாக வளர விடாமல், தடுத்து விடுகிறது, இதுதவிர, விரைகளின் இயக்கத்தையும், ஹார்மோன்களின் கட்டுப்பாட்டையும் சிதைத்து விடுகிறது. இதன் காரணமாக ஆண்குறி விரைக்கும் தன்மை குறைந்து ஆண்மையை இழந்து விட செய்து விடுகிறது.
     இந்த நிலைக்குத் தள்ளப்படுவது எதனால்? போதைப் பொருள்களை பயன்படுத்துவதனால்தானே! இனியும் தேவையா? இந்த போதைப் பொருள்கள். போதைப் பொருள்களை பயன்படுத்தாதீர்கள். அதனால் உடல்நலத்தீங்குதான் ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்ட நீங்கள் விட்டுவிட்டு வாழ்வீர்கள் அல்லவா? நிச்சயம் மாற்றிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

புகைப்பதை நிறுத்தினால்

புகைப்பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்போர் இந்தியார்கள் என்கிறது புள்ளி விவரம், எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலெண்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.


    புகையிலையில் 4000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை, குறிப்பாக ஹைட்ரஜன் சய்னைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.

    சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளுங்கள் 'சிகரெட் பழக்கத்தை விட்ட உடனே இரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்து விடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண்களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகாரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.”

    பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

    ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக... பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறீh;கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும், உதாரணத்துக்கு ஒருவர் தன் 20 வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

    தன் 50வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும் அல்லவா.” என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே... இனி புகைப்பதை நிறுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

திங்கள், 17 செப்டம்பர், 2012

புற்றுநோய்க்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்

புற்று நோய் உடலில் உடலுக்குள், சிதைந்த ஒரு திசு. இது தன்னைச் சுற்றி தன் அசுர வளர்ச்சியை காலிபிளவர் போல் பெருகிடச் செய்யும். இது பரம்பரையாக பெற்றோர் எவருக்கேனும் இருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கு 7 சதவீதம் வரும் மற்றவர்கள் கட்டாயம் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும்.

புற்றுநோய் மரபுகளாக மற்றவருக்கு வரக்காரணம் சுற்றுசூழல்தான். சிகரெட் புகைக்கும் நூற்றில் 40 பேருக்கு புற்றுநோய் வரும். மீதமுள்ள 60 பேருக்கு கட்டாயம் இதயம், நுரையீரல் நோய் வரும். நம் பழக்கத்தில் இல்லாத புதிய வகையான பான்மசாலா, பான்பராக், குட்கா, புகையிலை தூள், மூக்குபொடி என புகையிலை சார்ந்த அத்தனையும் புற்று நோயின் நண்பன். அதைப்போலவே அசைவ உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் காரமசலா பொருட்கள் குடல் அழற்சி, குடல் புண் வரக்காரணம் இந்த குடல் புண்களின் திசு ஏதெனும் சிதைந்து அதனைச் சுற்றி இதர எல்லா திசுவும் இத்துடன் சேரத் தொடங்கினால் புற்றுகட்டியாக மாறும். எனவே அசைவத்தில் அளவும் அன்றாடம் உண்பதை தவிர்ப்பதும் இன்றைய நிலைக்கு நல்லது. தொடர்ந்து இருமல் வியர்ப்பது கட்டி ஆறாத புண், ரத்தக்கழிவு, மலத்தில் ரத்தம் தவறும் மாதவிடாய் போன்ற பலவும் இந்த நோயின் அறிகுறிகள். இதனை முறிப்படி உடனடியாக சோதித்து உரிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது. எனினும் தற்போது தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அபாயகரமாகக் கூடி வருகிறது.  புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமென்றால் மேற்கண்ட எந்த தீய பழக்கத்திற்கும் இலக்காகாமல் வாழ்ந்தாலே போதும். புற்றுநோய் என்பது இனி மனித வாழ்வில் காணமல் போகும். காணாமல் போகும்படி வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

சனி, 8 செப்டம்பர், 2012

பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் அன்பாக இருங்கள்.


உங்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசி அவர்களின் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனைகளில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள் என்பது தெரியவரும். அப்படி தெரியவந்தால் அப்பிரச்சனைக்க்கு உடனடியாக தீர்வு காண முயலுங்கள்.

உங்கள் குழந்தையின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதனை செய்ய அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து தீர்வு காண முயலுங்கள். உங்களது பிள்ளையை யார் யாரெல்லாம் பார்க்க வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி கவனித்து வைத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அவர்களை கவனிப்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது. உங்கள் பிள்ளைகளுக்கும் கூடத்தான். அவர்கள் கூடுவது தவறான செயல்களுக்குத்தான் என்று தெரிந்தால் அதை மென்மையாக எடுத்துரைத்துவிட வேண்டுமே தவிர வன்மையாக செயல்படக்கூடாது. பலர்முன் தவறான செயல்களைப் பற்றி திட்டவும் கூடாது. அதுவும் வயது வந்த பிள்ளையாக இருந்தால் நாலுபேர் முன்னிலையில் கடிந்து கொள்வதே கூடாது.

அதனால் உங்களுக்கு எந்தப் பயனும், அதாவது எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆகவே எதைச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதனை நாசுக்காகச் சொல்ல வேண்டும். அதில் அவர்கள் மனம் புண்படும். அதனால் அவர்கள் தங்கள் பெற்றோர் தாம் செய்யும் தவறினால் எவ்வளவு தூரம் மனது புண்படுகிறார் என்று பிள்ளைகள் உணருவார்கள். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கி அதன்மூலம் தீர்வு காண முயலுங்கள்.

வீட்டில் உள்ள மருந்துகள் எல்லாமும் கண்காணிப்பாக வைத்திருங்கள். அடிக்கடி யாருக்கும் தெரியாமல் அதனைச் சரி செய்து பாருங்கள். உங்கள் மகன் உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பவனாக இருந்தால் அவனது உடமைகளில் அல்லது படுக்கை அறையில் சிரிஞ்ச் போன்ற பொருள் ஏதேனும் தென்படுகிறா என்பதைக் கண்காணியுங்கள்.

நீங்களே மதுவோ, போதை மருந்தோ அருந்தாமல் ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள். இவைகள் எல்லாம் பெற்றோர் கவனிக்க வேண்டியவைகள் ஆகும்.

மாணவர்களும், ஆசிரியர்தம் கடமைகளும்.

மாணவர்கள் பெரும்பாலும் தீய பழக்கத்திற்கு இலக்காகுவது வளர்இளம்பருவத்தில்தான். அதாவது பள்ளிப்பருவத்திலோ அல்லது கல்லூரிவாழ்க்கையிலோ இது தொடங்குகிறது.

மாணவப்பருவத்தில் இந்தப் பழக்கம் வருவதால், ஆசிரியர்கள் என்ற முறையில் என்ன செய்ய வேண்டும் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆசிரியர் என்ற நிலையில் உங்கள் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நண்பனாக, உதவியாளராக இருங்கள். உங்கள் மாணவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். தீய பழக்கத்தின் விளைவுகளை எடுத்துரையுங்கள். அதன் அபாயம் பற்றியும் தெளிவுப்படுத்துங்கள். அப்படி எடுத்துரைத்தால் மாணவர்கள் விழிப்படைவார்கள். உங்கள் மாணவர்களின் நலன்களிம், நடவடிக்கைகளிலும் அக்கரை காட்டுங்கள். எந்த ஒரு போதைப் பழக்கம் பற்றியும் பேசுமாறும் அது சம்பந்தமான தகவல்களை தெரிவித்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

விடலைப் பருவப் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுங்கள். அவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டேயிருங்கள். உங்களின் ஒவ்வொரு மாணவனையும் கண்காணியுங்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிப்பது மிக முக்கியம்.

வேறு கல்லூரி மாணவர்கள் மற்ற பள்ளிமாணவர்கள் உங்கள் மாணவர்களைத் தேடி அடிக்கடி வருகிறார்களா? ஏன் எதற்கு என்று ஒரு கண் வையுங்கள். அடுத்து வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன் வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துரையுங்கள். அடுத்தது இலட்சியங்கள் நிர்ணயிக்க உதவுங்கள். இப்படி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டால் மாணவர்கள் வாழ்க்கையில் எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் வாழமுடியும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

பெற்றோர்கள் கவனத்திற்கு!

பெற்றோர்கள் கவனத்திற்கு!
 உங்கள் வாரிசுகளுக்கு சிறிது நேரத்தை
ஒதுக்குங்கள் ஏன் ? படியுங்கள்!


    உங்கள் மகன் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்றால் அவரை ரகசியமாக கண்காணிப்பது அவசியம். அவரது நண்பர்கள் வட்டத்தையும் வெளியே செல்லும்போது தேவையில்லாத இடங்களுக்கு செல்கிறாரா என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

     என்ன அய்யா, என் மகனையா கண்காணிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்விக்கு பதில் இதோ! உலகளாவிய இளைஞர்கள் புகையிலையை பயன்படுத்துவது, இந்தியாவில் 13 வயதில் இருந்து 15வயது வரை உள்ள சிறுவர்களில் 17.3 சதவீதம் பேர்கள் புகையிலையை ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்துகிறார்கள். எனவே, உங்களுடைய நேரத்தை உங்கள் பிள்ளைகளுக்காக கொஞ்சம் செலவு செய்தால் மிகவும் நல்லது. இனி உங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு கவனத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

திங்கள், 3 செப்டம்பர், 2012

வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.

    இன்றைய இளைஞர்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதில் 13, 14 வயது வளர் இளம்பருவத்தினரும் அடக்கம். இவர்கள் புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளைப் பற்றி அறியாமல் அதில் சிக்கிக்கொள்கின்றனர். காலப்போக்கில் உடல்நலம் கெட்ட பின்னரே அதிலிருந்து மீளவேண்டும் என்று துடிக்கின்றனர். எதுவாக இருந்தாலும் சரி கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செலுத்துவதில் என்ன பயன்? இத்தகையவர்கள் எப்படி இதில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று பார்த்ததில் தாம் வயதில் பெரியவர்கள் ஆவிட்டதைக் காட்டும் அடையாளமாகவும், தற்பெருமைக்காகவும், தீய நண்பர்களின் தூண்டுதலின் பேரிலும், இத்தீய பழக்கத்திற்கு இரையாகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இச்செயலால் பெற்றோர்களின் நம்பிக்கையும், கனவுகளுக்கும் டாட்டா காட்டி விடுகின்றனர். மேலும், பெற்றோர்கள் தன் மகன் சிறுவன்தானே என்று அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.  என் மகன் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டான் என்ற நம்பிக்கையின் பேரிலும் இருந்து விடுகின்றனர்.

     பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளை பின் தொடர்ந்துதான் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறானா? அப்படி வரவில்லையென்றால் அதற்கு என்ன காரணம் என்பதைப்பற்றியெல்லாம் கேட்கலாம் அல்லது கண்காணிக்கலாம். மேலும் அவனது நண்பர்கள் வட்டத்தையும் கவனிக்க வேண்டும். அவர்கள் பள்ளி மாணவர்களாக அல்லது வேறு நண்பர்களா? அதில் அவர்கள் எத்தகையவர்கள் என்பதையும் அறிய வேண்டும். இதில் அலட்சியமாக இருந்துவிட்டால் பின் வருந்திப்பயன் ஏதும் இல்லை. இது இக்காலத்தின் சூழ்நிலையாகும். அதனால் உங்கள் பொன்னான நேரத்தை கொஞ்சம் அவனுக்கும் கண்காணிப்பதற்காக செலவு செய்தால் அது உங்களுக்கும் நல்லது. ஏன் இந்த சமுதாயத்திற்கும் நல்லதுதானே? எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் போதும் என்று இருந்துவிடாதீர்கள். அவர்கள் மீது கண்காணிப்பு அவசியம் தேவை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அதனால் அவதியும் படாதீர்கள் என அறிவுறுத்தும்...

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்


    உங்கள் மகன் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்றால் அவரை ரகசியமாக கண்காணிப்பது அவசியம்.

    என் மகனையா கண்காணிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்விக்கு பதில் இதோ! உலகளாவிய இளைஞர்கள் புகையிலையை பயன்படுத்துவது, இந்தியாவில் 13 வயதில் இருந்து 15வயது வரை உள்ள சிறுவர்களில் 17.3 சதவீதம் பேர்கள் புகையிலையை ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்துகிறார்கள். எனவே, உங்களுடைய பிள்ளைகளுக்காக கொஞ்சம் நேரம் செலவு செய்தால் மிகவும் நல்லது. இனி உங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு கவனத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

புகை பிடிக்கும் பழக்கம்

உங்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா! ஆம் என்றால்,
உடனே அந்த பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.
ஏன் ? படியுங்கள்!

        புகைப்பழக்கத்தால் உங்களுக்கு   எந்த ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அது உடல் நலத்திற்கு தீங்கைதான் விளைவிக்கிறது. அது ஆண்மை தன்மைக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணிவிடுகிறது. புகையிலையில் உள்ள நிகோடின் விந்தணுக்களின் நீந்தும் தன்மையை இழந்து விடுகிறது.

    இது ஒருபுறம் என்றால்  மற்றொருபுறம் நிகோடின் விரைகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் ஓர் பிடித்தத்தை ஏற்படுத்தி இரத்தத்தின் அளவையும் குறைத்து, விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்க செய்துவிடுகிறது. மேலும் இரத்தத்தில் புரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவையையும் அதிகப்படுத்துகிறது. நாளாக நாளாக உடலுறவு ஆர்வமும் குறைந்து வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டும் விடுகிறது. அதனால் சமுதாய சீர்கேடு பிரச்சனைகளும் தோன்றிவிடுகின்றன.

     இதையெல்லாம் தவிர்த்து சிறப்புடன் வாழ வேண்டுமானால் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிடுங்கள். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் ஒரு நல்ல அர்த்தத்தையும் கொடுக்கும்.

இனி புகைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

புகையிலை உற்பத்தியை தடை செய்ய வேண்டும்

புகையிலை உற்பத்தியை தடை செய்ய வேண்டும்‚
ஏன்? படியுங்கள்.


     நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை அறிவித்துள்ளது. பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்து விடுவது மிக நன்மையாக முடியும். இதை ஒரு சமுதாய கடமையாக கருதி மக்களே முன்வந்து செய்ய வேண்டும். இது போல  18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ய தடையும் இருக்கிறது. அது தொடர்ந்து இருந்தால் சமுதாயத்தில் இளைஞர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

சமுதாயத்தை சீர்திருத்த நமக்கு கிடைத்த நல் வாய்ப்பாக கருதி நாம் செயலாற்ற வேண்டும். புகையிலைப்பொருட்களால் ஏற்படும் கெடுதலை பிஞ்சு நெஞ்சங்களிலே  விதைக்க வேண்டும். புகைப்பதால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தும், புகையிலை மீது பற்று வைத்தால் புற்று நோய் வந்துவிடும் என்பதையும் பள்ளி பாட திட்டங்களில் சேர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். புகைபழக்கம் இல்லா நாட்டை உருவாக்கும் விரும்புபவர்களின் சீரிய  சிந்தனையாகும்.

    நானும் உங்களிடம் ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளேன். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

போதைப்பொருள் கடத்தலும், ஐ.நா.சபை எடுத்த


போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மனநல கோளாறுகளை பற்றியும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை புகைப்படங்களுடன் கூடிய விளக்கத்துடன் தொகுத்து வழங்குவது உங்களுக்காக.

போதைப்பொருள் கடத்தலும், ஐ.நா.சபை எடுத்த நடவடிக்கைக்கு
கிடைத்த நற்பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    ஐ.நா.சபை போதைப்பொருள் பழக்கம் மற்றும் விற்பனையைத் தடுக்க பலமுயற்சிகளை எடுத்துக் கொண்டது. ஐக்கியநாடுகள் குழு குறித்து நடத்திய கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்தது. அப்போது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட சட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி இரண்டாம் முறையாக ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கும்படி சட்டம் கடுமையாக்கப்பட்டது. இந்த முடிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்புச்சட்டத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது ஆகும்.

    மும்பை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 350கிலோகிராம் ஹெராயின்தான், உலக அளவிலேயே அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளாகும் என்று சர்வதேச புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


   போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதற்கென்றே விசேஷ கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. போதை மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அளிக்கப்படுகின்றன.


    இதைத் தடுக்கவும் அரசு பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது. மேலும் நாட்டின் எல்லைப் புறங்களில் நடைபெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்துதலின் சம்பந்தப்பட்டிருப்பவர்களை அல்லது சந்தேகப்படுபவர்களை அரசாங்கம் தன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகமும் இது சம்பந்தமான விஷயங்களில் உள் விவகாரத்துறையுடன் இணைந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைபொருள்  கடத்துவதை தடுப்பதற்கு திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.  தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்...